12/07/2015

பாபநாசம்  - என் பார்வையில்

கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் பல சாதனைகளை முறியடித்த  "த்ரிஷ்யம்"   தமிழில் பாபநாசமாக...
அதே யதார்த்தத்துடன்...

-----பாராட்டப்படவேண்டிய  இரண்டு பேர்கள்----
1. ஒரு மலையாள இயக்குனர்   நெல்லை மண்வாசனையோடு  ஒரு நல்ல தமிழ்படம் தந்ததற்காக  இயக்குனர்  ஜீத்து ஜோசப்பிற்கு  ஒரு மணிமகுடமே சூட்டலாம். 
நல்ல கதை..அதை விறுவிருப்பாக லாஜிக் மீறாமல் சொல்லி இருக்கும் விதம்....எந்த கதாபாத்திரத்தையும்  யதார்த்தம்மீறாமல்  இயக்கி  இருப்பது...   எல்லாமே அருமை...     நன்றி  ஜீத்து ச்சேட்டா

2.  கமல்
நேற்று முளைத்த காளான்களெல்லாம் போடும்ஆட்டத்துக்கு மத்தியில்,
உலகநாயகன்   வெறும் சாதாரண குடும்பத்தலைவானாக........
ஒரு மாபெரும் நடிகன் ....    இவ்வளவு சாதாரணமாக திரையில்  தோன்றி  நம்மில் ஒருவராக வாழ்ந்துகாட்டி இருப்பது ஆச்சர்யம்...
அது கமலால் மட்டுமே சாத்தியம்.. கோடி நன்றிகள்  கமல்ஜி   


-----தலைகுனிய வேண்டியவர்கள்---
குத்துபாடல்கள், சண்டைகாட்சிகள், பஞ்ச் வசனங்கள் இல்லாத, லாஜிக் மீறாத  மிகவும் யதார்த்தமான ஒரு  தமிழ் படம்....அதன் இயக்குனர் ஒரு மலையாளி.... 
இன்றைய  தமிழ்இயக்குனர்கள், தமிழ் நடிகர்கள்  பலரும் வெட்கி, தலை குனியவேண்டிய  விஷயம்...

----பாபநாசம்----
நிம்மதியாக  வாழ்ந்து கொண்டிருக்கும்  ஒரு குடும்பத்தின்  தற்காப்பிற்காக  செய்யப்பட்ட  தாக்குதல்  கொலையில் முடிகிறது.   நியாயத்திற்காக தங்களை தற்காத்துக்கொண்ட  அந்த குடும்பம்   சட்டத்தை எப்படி மேற்கொள்கிறது என்பதே  பாபநாசம்....

-----கதாபாத்திரங்களாக  வாழ்ந்தவர்கள்-----
சுயம்புலிங்கமாக  கமல்... ஹீரோயிசம் இல்லாத யதார்த்தமான குடும்பதலைவானாக நெல்லைத்தமிழ் பேசி  சுயம்புலிங்கமாக வாழ்ந்துகாட்டி இருக்கிறார்... தன்னை விமர்சிப்பவர்களுக்கு   தன் நேர்த்தியான நடிப்பிலேயே  பதிலடி கொடுத்திருக்கிறார்.. கிண்டல், பாசம், உருக்கம், அழுகை, சோகம்....எல்லா முகபாவங்களும் க்ளாஸ்.  
கமலின் ஒவ்வொரு படைப்பையும் வசைபாடும் கூட்டம்  இப்போது எங்கே கொண்டுசென்று வைத்துகொள்ள போகிறதோ தன் முகங்களை..

கமலின் மனைவியாக கௌதமி... நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில்...  அழகாக நெல்லை தமிழ்பேசி  அலட்டிகொள்ளாமல் நடித்திருக்கிறார்... நடிப்பை தொடரலாம்.  
கமலின் மகள்களாக  நிவேதா தாமஸ், எஸ்தர் அனில்.  இரண்டுபேரும்  கேரளாவை சேர்ந்தவர்கள்.    நிறைவான நடிப்பு..

கமலுக்கு அடுத்து  மனதில் பதியக்கூடியவர்கள்....
ஆஷா சரத் & ஆனந்த் மகாதேவன்..(இவர்களும் கேரளாவை  சேர்ந்தவர்கள்)
அதிலும்  ஆஷா சரத்.... மிரட்டலான அவர் பார்வை....நிஜமான ஒரு பெண்  ஐ.ஜி யை  கண் முன் நிறுத்துகிறார்... தியேட்டரே  கப்ச்சிப் ஆகும் அளவிற்கு நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.. 
ஆனந்த் மகாதேவன் - அமைதியான உருக்கமான நடிப்பு..

கான்ஸ்டபிள் பெருமாளாக  கலாபவன் மணி-  பெரும்பாலான நிஜ  போலீஸை  அப்படியே  பிரதிபலிக்கிறார்...
எகத்தாளமான அந்த பார்வை,  போலீஸ் மிரட்டல்...அற்புதமாக செய்திருக்கிறார்...  நெல்லை தமிழ் பேச  முயன்றிருக்கிறார்... பாராட்டலாம்

முஸ்லிம் பாயாக M .S பாஸ்கர் - சொல்லியா தர வேண்டும்..நெல்லை தமிழில் கொள்ளை கொள்கிறார்..
இளவரசு, வையாபுரி, சார்லி....குறைவாக வந்து போனாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள்..

எல்லா நடிகர்களையும்   யதார்த்தம் மாறாமல்  அந்தந்த பாத்திரங்களாகவே  வாழ வைத்திருப்பது,   விறுவிறுப்பான திரைக்கதையை கடைசிவரை தொய்வில்லாமல் கொண்டு செல்வது,   இப்படி எல்லாவற்றிலும்  ஜெயித்திருக்கிறார்  இயக்குனர்....
சந்தடி சாக்கில்   நிஜ காவல் துறை  எப்படி இருக்கும்,  அவர்களின்  அராஜகங்கள், போலிவிசாரணைகள்  எப்படி இருக்கும் என்பதை  சாதாரண குடிமகனுக்கும்  புரியும்படி  அங்கங்கே  வெட்ட வெளிச்சமாக சொல்லி இருக்கிறார் ... அதற்கு ஸ்பெசலாக இன்னொரு நன்றி சொல்லலாம்  


பாப நாசத்தின் இன்னொரு பலம் ஒளிப்பதிவாளர்   சுஜித் வாசுதேவ் (த்ரிஷ்யம் படத்திற்கும்  இவரே) 
கன கச்சிதம்...  குளிர்ச்சி...

எடிட்டிங் - அயூப் கான் (த்ரிஷ்யம் படத்திற்கும்  இவரே)-  விறுவிறுப்பான திரைக்கதையை  குழப்பாமல் அட்டகாசமாக  தொகுத்திருக்கிறார்.

வசனம் - ஜெயமோகன்... அளவான ஆனால் அர்த்தமுள்ள வசனங்கள்.

இசை -ஜிப்ரான்
வழக்கமான வித்தியாசமான ஜிப்ரான் இசை...பாடல்களில் கோட்டை விட்டவர்  பின்னணி இசையில்  கொஞ்சம் மிரட்டி பார்க்கிறார்...

மொத்தத்தில்  மலையாளத்தில் மாபெரும்  வெற்றி பெற்ற ஒரு குடும்ப  கதையை...அதே விறுவிருப்புடன்  தொய்வில்லாமல்....
நெல்லைதமிழ் மண்வாசனையுடன்  மறுஉருவாக்கம்  செய்ததில்   இங்கேயும் வென்றிருக்கிறார்  இயக்குனர் ஜீத்து ஜோசப்...

படம் முடிந்து  வெளிய வரும்போது   நெல்லை மண்ணிலே வாழ்ந்து விட்டு வந்த  ஒரு மன நிறைவு...

நல்ல சினிமாவிற்கு ஏங்கித்தவிக்கும்  தமிழ் ரசிகர்களுக்கு  பாபநாசம் ஒரு வரப்ப்ரசாதம்...

பாபநாசம் - அட்டகாசம்
SREENIVASANMUSIC.BLOGSPOTCOM

No comments: